இரண்டு தலைநகரங்கள்
வேடிக்கை வாணச் சிறுமழையும்
அணிநடை யானைப் பேருலாவும்
படர் நெடும் மின்கொடிச் சரமும்
உங்களிராவை நனைக்கையில்
பொங்கிப் பிரகாசம் கொள்ளும் உங்கள் நகரத்தை
போகமும் போதையும் மிஞ்சித் தள்ளாடும் நள்ளிராக்களை
தூக்கத்தினால் மூடி நீங்கள் புரள்கையில்
சன்னங்களாலும் பீரங்கிகளாலும்
உடைத்துத் திறக்கப்படுகிறது
ஊரடங்கிய வேறொரு நகரம்
பசியும் வலியும் தீராப் பீதியும் பீடித்த நள்ளிராக்களில்
பெருக்கெடுக்கும் இரத்தத் தெருக்களை
தூங்காக் கண்களால் கடக்கிறார்கள்
இன்னொரு தலை நகரத்து மக்கள்
உத்தரை
தோட்டத்தில் செந்தாழ் மலர்க் குடுவையில்
நிலா சொரிந்திருக்க்க கண்டாள்
தொலைவில் காவலரண்களின் தீ நாக்குகள் புள்ளிகளாய் தெரிந்தன
பேரமைதி அச்சமூட்டியது
சிதிலமடைந்த மாளிகையின் நெடுந்தோங்கிய நிழல்களை ஆழப் பார்த்தாள்
எப்போதும் பிடிவதமாய் முன் சரியும் குழற் கற்றைகளைப்
பின் தள்ளியபடி எப்போதும்போல அவன் தோன்றுகிறானாவென
பெருமூச்சு விட்டாள்
கூட்டம் கலைந்து விட்டது
கூடத்து நிலைக் கண்ணாடியில் அவளைப் பார்த்தாளவள்
விராடனின் கனவே
அபிமன்யுவின் பேரழகியே
நீயல்ல இது
யாரோ
வேறு யாரோ
அஸ்தினாபுரத்து இளம் விதவைகள் கூட்டத்தில் ஒருத்தி
அரற்றியபடியே
வெளியே பார்த்தாள்
வெறிச்சோடிய தெருக்களில் யாருமில்லை
Illustration by Nur Khalisah Ahmad
Subscribe for new writing
Sign up to receive new pieces of writing as soon as they are published as well as information on competitions, creative grants and more.